சென்னையில் 12 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 19 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் மாணவி கருத்தரித்து கடந்த 7 நாட்களுக்கு முன் கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவந்தது. மருத்துவர்கள் அளித்த இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் மாணவியிடம் நடந்தது பற்றி விசாரித்துள்ளார்.
அப்போது கடந்த பிப்ரவரி மாதம் உறவினர் வீட்டு கிரஹ பிரவேசத்துக்கு சென்ற இடத்தில், எதிர்வீட்டில் வசித்த பெயிண்டராக பணியாற்றி வரும் அரவிந்தன்(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின் தன்னை அவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தாயாரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபற்றி வெளியில் சொல்ல வேண்டாமெனவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் அரவிந்தன் கூறியதால் இதுபற்றி வெளியில் கூறாமல் மறைத்து வந்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ரேணுகாதேவி மற்றும் உதவி ஆய்வாளர் ரேணுகா ஆகியோர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.