கொரோனா வைரஸை விரட்டும் சக்தி கழுதைப்பாலில் இருக்கிறது என்றும் மக்கள் நம்புவதால் தருமபுரியில் பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் உலகிற்கு கற்பித்த படிப்பினை கொஞ்ச நஞ்சமல்ல. அந்த அளவுக்கு எல்லா வகையிலும் அனுபவம் தந்துள்ளது. வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் எந்தப்பகுதியில் எவ்வளவு நேரம் வீரியமாக இருக்கும் என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது அதனை விரட்டுவது தான் முதன்மை வேலை எல்லோரும் செயல்படுகின்றனர். அதற்காக சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை மக்கள் சாப்பிட தொடங்கியுள்ளனர்.
கீரை, இறைச்சி என உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய மக்கள் உணவுப் பொருட்களை சாப்பிடுகின்றனர்.
மேலும் தற்போது சளி, காய்ச்சல் வந்தாலே கொரோனா என்று அச்சப்படும் அளவுக்கு மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கழுதை பால் விற்பனை சூடு பிடித்துள்ளது.
சளி, இருமல், காய்ச்சல் ஆகிய பிரச்னைகளை கழுதைப்பால் உடனே குணப்படுத்தும் என்று சொல்லியும், கொரோனாவை விரட்டக் கூடிய அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது என்றும் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கழுதையுடன் வீடு வீடாக சென்று அங்கேயே பாலை கறந்து கொடுத்து வருகின்றனர். ஒரு டம்ளர் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது.
கொரோனா விரட்டுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது என்று மக்கள் நம்புவதால் பலரும் நூறு ரூபாய் கொடுத்து பால் வாங்குகின்றனர்.