97 வயதில் இன்று இறைவனடி சேர்ந்துவிட்ட தஞ்சாவூர் சங்கரய்யர் இயற்றிய பாடல்களை இப்போது பாடாத பாடகர்களே கிடையாது. மறைந்த பிரபல வித்வான் டி.கே. ஜெயராமன் இவருடைய பாடல்கள் பலவற்றை நிறைய பிரபலப்படுத்தினார்.
பாடகராகவும் மருத்துவராகவும் இன்று பலரும் அறிந்த டாக்டர் எஸ்.சுந்தர், சங்கரய்யருக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார். அவரிடம் இசையும் கற்றிருக்கிறார்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அடையாறு சந்தோஷ் மருத்துவமனையில் சங்கரய்யருக்கு சிகிச்சையளித்திருக்கிறார் டாக்டர் சுந்தர். அந்த சமயத்தில் அவரிடமிருந்து பாடல்களும் கற்றிருக்கிறார் வித்வான் சுந்தர்!
“சிகிச்சைக்கு நீங்க fees எதுவும் கொடுக்க வேண்டாம். பதிலா, எனக்கு பாட்டு சொல்லிக் கொடுங்க..அதுவும் நீங்க இயற்றின கீர்த்தனைகள் மட்டும்…” என்று சொன்னாராம் சுந்தர்.
சில வருடங்களாக தாழையூற்றில் தனது சகோதரரின் மகன் வீட்டில் தங்கியிருந்தாராம் சங்கரய்யர். இசை தொடர்பான சந்தேகம் கேட்டு வருபவர்களுக்கு உதவியிருக்கிறார்.
தஞ்சாவூர் சங்கரய்யரை பிதாமகராகப் போற்றி வணங்கும் இன்னொரு வித்வான், நெய்வேலி சந்தானகோபாலன்.
நாகஸ்வர வித்வான் இஞ்சிக்குடி சுப்ரமணியன், சங்கரய்யரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறார்.
- வீயெஸ்வி (பேஸ்புக் பதிவில்…)