ஜெலபிரதா என்ற பெண் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள இலங்கம் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தந்தை ராகவனுக்கு ஏற்பட்ட உடல் நல குறைவால் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் இவர் தனது தாய் பிரபாவதி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் மணிகண்டனை கவனித்து வந்துள்ளார். மேலும் இவர் தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைக்கு செல்வதில் வரும் வருமானத்தில் தான் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இவரது நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தாய் பிரபாவதியும் உடல் நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தாய் தந்தை இருவரையும் இழந்து தவித்த ஜெலபிரதா, மனநலம் பாதிகப்பட்ட தனது சகோதரனுடன் குடிசை வீட்டில் வறுமையோடு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த குடிசை வீடும், 3 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுக்கு இரையாகி முழுவதுமாக சேதமடைந்தது. கொரோனா காலத்தில் எங்கே செல்வது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல், அண்ணனுடன் அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் குடியேறினார் ஜெலபிரதா.
குழாய் தண்ணீரை மூன்று வேளையும் குடித்து இருவரும் பசியை சமாளித்து வந்த நிலையில், பசி மயக்கத்தால் மயங்கி விழுந்து ஜெலபிரதா உயிரிழந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனுக்காக திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்க்கையை தியாகம் செய்து பசியால் ஜெலபிரதா உயிரிழந்தது, அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.