Home கிரைம் நியூஸ் வாழ வைக்கும் தெய்வமே.. வாழ்த்தால் சிக்கிய மதுப்ரியர் வாட்ஸ்அப் குழு!

வாழ வைக்கும் தெய்வமே.. வாழ்த்தால் சிக்கிய மதுப்ரியர் வாட்ஸ்அப் குழு!

janarthanan saravanan
janarthanan saravanan

தமிழகத்தில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், பல பகுதிகளில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது.

கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து மதுபானங்களைக் கடத்தி வந்து பல மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்தும் பலர் ‘கல்லா’ கட்டிவருகிறார்கள்.

ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கெடுபிடி காட்டிவரும் நிலையில், அண்டை மாநிலங்களிலிருந்து யார் கண்ணிலும் சிக்காமல் எப்படி மதுபானங்களை எடுத்துவருகிறார்கள் என்ற கேள்வியைத் தமிழக காவல்துறையினரிடமே விட்டுவிடுவோம்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ‘சரக்கு’ என்ற பெயரில் வாட்ஸ்-அப் குழு தொடங்கி, அதில் 200 மதுபிரியர்களை இணைத்து வகை வகையான மதுபானங்களை விற்பனை செய்து வந்த இருவர் சிக்கியிருக்கிறார்கள்.

அதுவும், ஊரறிய பத்திரிகைகளில் செய்தி வெளியானப் பின்னரே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியும் சுவாரஸ்ய மூட்டுகிறது.

வாணியம்பாடி அருகேயுள்ள பெருமாள்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்ற இளைஞர் ஒருவர், ஊரடங்கிலும் கை நிறைய சம்பாதிக்க திட்டமிட்டிருக்கிறார்.

‘மதுபான விற்பனையில்தான் பணம் கொட்டுகிறது’ என்று பூரிப்படைந்து, வெளிநாடு சரக்கு, அண்டை மாநில மதுபானம், உள்ளூர் சாராயத்தை விற்க முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக கடந்த மாதம் 13-ஆம் தேதியன்றே ‘சரக்கு’ என்ற பெயரில் வாட்ஸ்-அப் குழு ஒன்றை தொடங்கியிருக்கிறார் ஜனார்த்தனன். அதில், வாணியம்பாடி பகுதியிலுள்ள மதுபிரியர்கள் சுமார் 200 பேரை இணைத்து, மதுபானங்களின் படங்களைப் பதிவிட்டு அறிமுக சலுகையையும் அறிவித்துள்ளார்.

குழுவிலுள்ள மதுபிரியர்கள், தங்களுக்கு விருப்பப்பட்ட பிராண்ட் மதுபானத்தை செலக்ட் செய்து பதிவு செய்தால் போதும்.
கைது செய்யப்பட்ட இருவர்
அதற்குரியப் பணத்தை கூகுள் பே, போன் பே மூலமாக உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் அட்மின், குறிப்பிட்ட பகுதிகளின் பெயர்களைச் சொல்லி, ‘அங்குப்போய் வாங்கிக் கொள்’ என்று வாட்ஸ்-அப் குழுவிலேயே தெரியப்படுத்துவாராம்.

குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் மதுபிரியர்களும், அட்மினிடமிருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து தங்கள் பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்துள்ளனர்.

இதனால், மதுபிரியர்கள் பலரும் அட்மின் ஜனார்த்தனனை வாழ்த்துகிறோம் என்று நினைத்துக்கொண்டு, ‘எங்களையெல்லாம் வாழ வைக்கும் தெய்வமே’ என்று வாட்ஸ் அப்பிலேயே புகழ் பாடியிருக்கிறார்கள்.

இதுதொடர்பான தகவல் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து, பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து, எஸ்.பி விஜயகுமார் உத்தரவின்பேரில், வாட்ஸ்-அப் குழு மூலம் மது விற்பனையில் ஈடுபட்டுவந்த அட்மின் ஜனார்த்தனன் மற்றும் அவரின் உதவியாளர் நியூடவுன் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரையும் வாணியம்பாடி நகர போலீஸார் கைது செய்துள்ளனர்.

அட்மினிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபானங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அட்மினுடன் தொடர்பிலிருந்த மதுபிரியர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version