திண்டுக்கல்லில் ஊரடங்கின் போது கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி ஐந்தாம் வகுப்பு படிக்கும் 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பிலிருந்து தனியார் பள்ளி நீக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நத்தம் சாலையில் பொன்னகரம் பகுதியில் சௌந்தரராஜா வித்யாலயா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது . கடந்த கல்வி ஆண்டு முடிவடைந்த நிலையில் 2021- 2022 ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் பெற்றோர்கள் உடனடியாக இந்த பருவத்திற்கான முழு கல்வி கட்டணமாக சுமார் 27 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என குறுந்தகவல் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது என்றும், சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என சில பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதனை கண்டுகொள்ளாத சௌந்தரராஜா வித்யாலயா பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்புக்கு கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி ஐந்தாம் வகுப்பு படிக்கும் 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பில் இருந்து திடீரென நீக்கிஉள்ளது .
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பள்ளி செயல்படாத நிலையில் பேருந்து கட்டணம், விளையாட்டு கட்டணம் மற்றும் உணவுக் கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்தே வசூலிப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.