தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்பது உள்பட பல முக்கிய உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 7 திங்கள் கிழமை நேற்று பிறப்பித்தது.
தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது தொடர்பாக 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கில் இந்து சமய அறநியைத்துறை சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன. இதில் 8,450 கோயில்கள் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் பிரதான கோயில்களாக கருதப்படுகிறது. 44 ஆயிரம் கோயில்களில் 32,932 நல்ல நிலையில் இருப்பதாகவும் 6,414 கோயில்களில் சிறிய சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டி இருப்பதாகவும், 530 கோயில்கள் பாதி சிதிலம் அடைந்துள்ளதாகவும், 716 கோயில்கள் முழுமையாக சிதிலம் அடைந்துள்ளதாகவும் அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதி மற்றும் முழுமையாக சிதிலமடைந்த கோயில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவன் அடங்கிய அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
அந்தத் தீர்ப்பின் முழு வடிவம்… இங்கே!
தமிழக அரசுக்கும், மத்திய தொல்லியல் துறைக்கும் சுமார் 75 உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். அதில் தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்.
நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும்.
கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும்.
கோயில்களில் வலுவான அறை அமைத்து சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலைகள், நகைகள் புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும்.
கோயில் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும்.
கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும்,
கோவில்களுக்கு சொந்தமான நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
கோவில் நிலங்கள், சொத்துக்களை திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
– உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் அதில் உள்ளன.
மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கின் இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும், அதுகுறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 12 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
முக்கியமாக, கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்த வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும், நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும், கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும், கோயில் நிலங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது ஆன்மிக அன்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.