ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், வாட்சப் குழுவை கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக தொடங்கி இருக்கின்றனர்.
இக்குழுவில் பள்ளியின் முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள், தற்போது பயின்று வரும் மாணவிகள் என 200 க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.
இக்குழுவில் உள்ள அட்மின்கள் 6 பேர் மட்டுமே பதிவு செய்யும் வகையில் அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இணையவழி கல்வி தொடர்பான தகவல் பகிரப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக குழுவில் அடுத்தடுத்து 6 ஆபாச படங்கள் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவே, பயிற்சி ஆசிரியை எண்ணில் இருந்து ஆபாச படங்கள் வந்ததால் அவரை நேரில் பள்ளிக்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
இதில், தனது அலைபேசி தொலைந்துவிட்டது என்றும், தனக்கும் ஆபாச படங்கள் அனுப்பியதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களிடம் பதிலளித்த பள்ளி நிர்வாகம் பள்ளியின் பெயரில் எந்த வாட்சப் குழுவும் இல்லை, அந்த ஆசிரியர் இங்கு பணியாகவும் இல்லை என்று சமாளித்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக பெற்றோர்கள் ஈரோடு காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார்கள் அளிக்கவே, சைபர் கிரைம் காவல் துறையினருக்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆசிரியர் வேண்டும் என்றே ஆபாச படங்களை அனுப்பி வைத்தாரா? அல்லது விஷமிகள் அவரது அலைபேசியை திருடி அனுப்பினர்களா? ஆசிரியர் ஏதேனும் மறைக்கிறாரா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.