விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் ‘ரங்கப்பா ஹோபிட்னா’, ‘தசவலா’, ‘ஹரிவு’, ‘கில்லிங் வீரப்பன்’, ‘நானு அவனல்ல அவளு உள்ளிட்ட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ‘நானு அவனல்ல.. அவளு’ படத்தில் திருநங்கை யாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் இவர்.
நடிகர் சஞ்சாரி விஜய் தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் அவர் தலையிலும் தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் அன்றிரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தற்போது ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, மருத்துவர் குழு கண்காணித்து வருகிறது.
அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அடுத்த 48 மணி நேரம் அவருக்கு மிகவும் முக்கியமானது என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று நடிகரின் சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்தார்.