புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸை செயலிழக்க வைக்கும் முகக்கவசத்தைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த முகக்கவசத்தை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்து பலமுறை உபயோகிக்கலாம். இது 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பலவித பெயரில் உலா வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறி மக்களை தாக்கி வருகிறது.
கொரோனா பரவாமல் தடுக்க இரண்டு மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மாஸ்க் இல்லாமல் இனி வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
என்-95 வகை முகக்கவசங்களை அணிந்தால் மட்டுமே, ஓரளவேனும் வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ்களை முழுவதுமாக தடுக்கும் முகக்கவசங்கள் அணிந்தால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
கொரோனா தாக்காமல் தடுக்கும் வகையில் புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான Thincr Technologies கொரோனா வைரஸை செயலிழக்க வைக்கும் முகக்கவசத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாஸ்க் மொத்தமாக மூன்று லேயர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. முகக்கவசத்தின் வெளிப்புற லேயரில் நுண்ணியிரிகளைக் கொல்லும் திறன் கொண்ட சோடியம் ஓலெஃபின் சல்போனேட் என்ற ரசாயனம் பூசப்பட்டிருக்கும்.
இந்த ரசாயனம் அழகு சாதான பொருள்களைத் தயாரிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சோப் தயாரிக்கும் மூலக்கூறுகளைக் கொண்டது.
இந்த ரசாயனம் கொரோனா வைரஸ் முகக்கவசத்தில் ஒட்டிய உடன் அதனுடைய வெளிப்புற சவ்வை சீர்குலைக்கிறது. இதன் காரணமாக வைரஸ் செயலிழந்துவிடும்.
நடுவிலுள்ள லேயரானது, வெளிப்புற லேயரில் பூசப்பட்டிருக்கும் ரசாயனத்திலிருந்து முகக்கவசம் அணிவரைப் பாதுகாக்கும். அந்த ரசாயனம் அணிபவரின் தோலைப் பாதிக்கும் தன்மை கொண்டது.
முகத்துடன் நேரடி தொடர்புகொண்ட உள்புற அடுக்கு, 100 சதவிகிதம் பருத்தியால் உருவாக்கப்பட்டிருக்கும்.
இது சுவாசப்பதில் இருக்கும் சிரமங்களைப் போக்கும். இது சாதாரண வகை, என் 95 வகை முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து வகை முகக்கவசங்களும் உட்புற லேயரில் இடம்பெறச் செய்யலாம்.
இந்த முகக்கவசத்தை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்து பலமுறை உபயோகிக்கலாம்.
Thincr Technologies நிறுவனம் வணிக அளவிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
மேலும் இந்தத் தயாரிப்பின் காப்புரிமைக்கும் விண்ணப்பித்திருக்கிறது. இந்த முகக்கவசத்தின் பயன்பாட்டுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் இந்த திட்டத்திற்கு நிதியளித்தது.
இதுவரை, 6,000 முகக்கவசங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நந்தூர்பார், நாசிக் மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும், பெங்களூருவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.