தென் ஆப்பிரிக்காவில் பூமியை தோண்டும் போது சில மர்மக்கற்கள் கிடைத்ததால் அதனை வைரம் என்று நம்பிய மக்கள் அந்த பகுதியில் குவிந்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்கிழக்கில் 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் உள்ள குவாஹலதி கிராமத்தின் புறநகரில் கடந்த வாரம் ஒரு கால்நடை வளர்ப்பவர் சில மர்ம கற்களைக் கண்டுபிடித்தார். இதனை வைரம் என்று நம்பிய அவர், இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.. பின்னர் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர்.
இந்த கற்கள் பயனற்றவை என்று அரசாங்கம் எச்சரித்த பிறகும் கூட, பலரும் அந்த இடத்திற்கு சென்று பூமியை தோண்டி பல கை நிறைய கற்களை எடுத்துள்ளனர்.
அப்படி அந்த கற்களை கண்டுபிடித்த 40 வயதான மகுதுலேலா பேசிய போது ” அவை உண்மையில் விலை உயர்ந்த கற்கள். இதனை வைத்து ஒரு கார், ஒரு வீடு வாங்கப் போகிறேன், என் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்புகிறேன்,” என்று தெரிவித்தார்.. இதே போல் அந்த கற்களை தோண்டி எடுத்த பலரும், அவை வைர கற்கள் என்றும், இந்த கற்களால் தங்களின் ஏழ்மை நிலை மாறக்கூடும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆனால் வல்லுநர்கள் கூறுகையில், “இவை வைரங்கள் அல்ல, இங்குள்ளவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள்” தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேற்கோளிட்டு, அதிகாரிகள், அங்கு கற்களை தோண்டும் மக்களை அப்பகுதியை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர்.
ஆனால் எந்த பயனும் இல்லை.. மக்கள் அங்கேயே கற்களை தோண்டியெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிக்க காவல்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
கற்களை சேகரிப்பதற்காகவும், பகுப்பாய்வு செய்வதற்காகவும் அந்நாட்டு அரசாங்கம் செவ்வாயன்று புவியியல் மற்றும் சுரங்க வல்லுநர்கள் குழுவை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.