திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்மணி, மருத்துவனையில் இருக்கப் பிடிக்காமல் குழந்தையை கட்டைப் பையில் மறைத்து எடுத்துச் சென்றதும், அப்போது குழந்தை உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜே.கே.ஜே. காலனியில் மனைவி தனலட்சுமி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனலட்சுமிக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது தனலட்சுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கே சிகிச்சை பெற்ற தனலட்சுமி, திடீரென கணவர் மற்றும் பிறந்த குழந்தையுடன் மாயமாகி உள்ளார். அதிர்ச்சி அடைந்த மருத்துமனை நிர்வாகம் பல்லடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் தனலட்சுமி வீட்டிற்கு சென்று விசாரித்தபோது தனக்கு மருத்துவமனையில் இருக்க பிடிக்காததால், வெளியேறி விட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும் கட்டைப் பையில் குழந்தையை மறைத்து எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாகவும் அதனை காளிவேலம்பட்டி பகுதியில் கணவர் சண்முகம் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் தனலட்சுமி கூறியுள்ளார்.
இதையடுத்து பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் முன்னிலையில் மருத்துவ குழுவினர் குழந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.