இளைஞருடன் உறவில் இருந்துவிட்டு வந்த மனைவி மீது ஆத்திரம் தீராததால் இளநீர் வெட்டும் அரிவாளால் அவரின் தலையை சீவி இருக்கிறார் கணவனின் செயல் ராமேஸ்வரம் பகுதி மக்களை அதிரவைத்திருக்கிறது.
ராமேஸ்வரம் மல்லிகை நகரில் வசித்து வருபவர் தில்லை. இளநீர் வியாபாரியான இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு பெண் குழந்தைக்கு இப்போது ஐந்து வயதாகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு திடீரென்று மாயமாகிவிட்டார் பவித்ரா. இதனால், மனைவியை காணவில்லை என்று ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு ஊரெங்கும் தேடி வந்தார் தில்லை.
சில நாட்கள் கழித்து தானாகவே வீடு வந்து சேர்ந்துள்ளார் பவித்ரா. எங்கே சென்றிருந்தாய் என்று கேட்டதில் ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.
உறவினர்களும், போலீசாரும் துருவித் துருவி விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பிரின்ஸ் தீபன் என்கிற இளைஞருடன் சென்று உறவில் இருந்துவிட்டு வந்தது தெரியவந்தது.
இரு வீட்டாரும் அமர்ந்து சமாதானம் பேசி தில்லை -பவித்ராவை மீண்டும் ஒற்றுமையாக வாழச்சொல்லிவிட்டு சென்றனர். ஆனால், இந்த சம்பவத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. உறவினர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் தில்லை சமாதானம் ஆகவில்லை. அவரது ஆத்திரம் அடங்காமல் இருந்து வந்துள்ளது.
சண்டையில் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார் பவித்ரா. நேற்று காலையில் குழந்தையுடன் அம்மா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, சமாதானம் பேசுவது போல் அருகே சென்றிருக்கிறார் தில்லை. அப்போது திடீரென்று பவித்ராவின் தலையை இளநீர் வெட்டும் அரிவாளால் சீவிவிட்டு தப்பித்து ஓடிவிட்டார்.
ராமேஸ்வரம் போலீசார் பவித்ராவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.