பள்ளியில் படிக்க வந்த 8ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் செய்த கொடுரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
32 வயதான ராஜா என்ற நபர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர். ஆரணியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 2016ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ள இவர், 8ம் வகுப்பு படித்து கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
மாணவி நெருங்கி பழகுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட ராஜா, பள்ளியில் வைத்து அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனிடையே ஆசிரியர் ராஜா குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பணியில் சேர்ந்து 4 ஆண்டு காலமாக திருவாரூர் மாவட்டத்திலேயே அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.
அரசு பணியில் சேர்ந்த பிறகும் ராஜா தொடர்ந்து மாணவியிடம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தற்போதைய கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்துள்ள சிறுமி பள்ளி ஆசிரியரான ராஜாவிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது சிறுமியின் தாய்க்கு தெரிந்தது.
இதை அடுத்து சிறுமியின் தாய் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆரணி மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் முன்னாள் ஆசிரியர் ராஜா மீது ஆரணி மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ராஜா தலைமறைவாகி உள்ளதால் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.