ஆரய்யா மாவட்டம் சதார் கோட்வாலி அருகே உள்ளது ஜமாலிபுர் என்ற கிராமம்.
இங்கு வசித்து வருபவர் அர்ஜூன் சிங். இவரது மகள் பெயர் அர்ச்சனா. இவருக்கு அச்சால்டா பகுதியைச் சேர்ந்த சிவம் என்ற மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு பேசி முடித்தனர்.
நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த 20ம் தேதி தான் இவர்களுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதால், நிறைய சீர்வரிசையை மண்டபத்துக்கு கொண்டு வந்து இறக்கினார் பெண்ணின் தந்தை.
மாப்பிள்ளை பைக் கேட்டதால் , புது பைக், பணம், பாத்திரங்கள் என எல்லாமே மண்டபத்தில் குவிந்தது. நண்பர்கள், உறவினர்கள் என மொத்த பேரும் கல்யாணத்துக்கு வர ஆரம்பித்தனர்.
மாப்பிள்ளையை அலங்காரம் செய்து சோஃபாவில் உட்கார வைத்திருந்தனர். ஆனால், கண்ணாடி அணிந்தவாறே உட்கார்ந்திருந்தார். ஒருமுறைகூட அந்த கண்ணாடியை கழட்டவே இல்லை. இதை மணப்பெண் கவனித்து தன் வீட்டிலும் இதை பற்றி கூறியுள்ளார்.
அவர்களும் மணமகன் ஏன் கண்ணாடி போட்டிருக்கிறார் என்று அங்கேயே சிலரிடம் விசாரித்துள்ளனர். மாப்பிள்ளைக்கு கண்ணாடி போடாவிட்டால் பார்வை தெரியாது என்று சொல்லி இருக்கிறார்கள். இதைக் கேட்டதும் மணப்பெண் அதிர்ந்து போயுள்ளார்.
உடனே ஒரு நியூஸ்பேப்பரை எடுத்து வந்து மாப்பிள்ளையிடம் நீட்டினார். அந்த நியூஸ்பேப்பர் ஹிந்தியில் இருந்தது. டக்கென பேப்பரை நீட்டி படிக்க சொல்லவும், மாப்பிள்ளை ஷாக் ஆகிவிட்டார்.
ஆனால் அவரால் நிஜமாகவே கண்ணாடி இல்லாமல் படிக்க முடியவில்லை. இதனால் மணப்பெண், இந்த கல்யாணமே வேண்டாம், உடனே நிறுத்துங்க என்று மணமேடையில் சத்தம் போட்டுள்ளார்.
முதன்முதலில் பெண் பார்க்க வந்தபோது, ஏதோ பேஷனுக்காக மாப்பிள்ளை கண்ணாடி போட்டிருக்கிறார் என்று நினைத்தாராம். ஆனால், பார்வை குறைபாடு இருப்பது தெரியாதாம். படித்தவர் என்று பொய் சொல்லி, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்ததாக கூறி மணமகன் வீட்டார் மீது மணப்பெண் போலீசில் புகார் தந்துள்ளார்.