கூகுளுடன் இணைந்து மலிவு விலையில் ஜியோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து உருவாக்கியுள்ள ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்.
இது குறித்து முகேஷ் அம்பானி கூறியதாவது: இந்தியாவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும். புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இத்துடன் நாட்டில் முழுமையான 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக கூகுள் க்ளவுட் தொழில்நுட்பத்துடன் கூடிய 5ஜி சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம்.
5ஜி-க்கு விரைவாகவும், தடையின்றி மேம்படுத்தவும் ஜியோ தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 5ஜி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க, உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து 5ஜி சாதனங்களை உருவாக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன், வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10ம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கூகுளின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து பேசிய கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, ‛இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்காக புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவது மற்றும் தொழில்நுட்பத்துடன் வணிகங்களை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.
4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெளிவரும்.’ எனக் கூறினார்.
ஜியோ பல்கலைக்கழகம்
முன்னதாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீடா அம்பானி பேசியதாவது:
ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
ஜியோ பல்கலைக்கழகம் தனது முதல் கல்வியாண்டில், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், டிஜிட்டல் மீடியா மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் தொடர்பு ஆகிய பாடப்பிரிவுகளை துவங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.