கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, உதவ முன் வாருங்கள். ஆர்வமுள்ளவர்கள் தத்தெடுக்கலாம்’ என சமூக வலைதளங்களில், விளம்பரம் செய்து, குழந்தைகளை விற்கும் கும்பல் முளைத்துள்ளது. கவனமாக இருக்கும்படி, போலீசார் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவுக்கு தாய், தந்தையை பறிகொடுத்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை, அரசே தத்தெடுத்து பராமரிக்கும் என, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆனால், ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் மோசடி நடக்கிறது. சமூக வலைதளங்களில், சில நாட்களாக, ‘2 வயது பெண் குழந்தை, இரண்டு மாத ஆண் குழந்தை உள்ளது; இக்குழந்தைகளின் பெற்றோர், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.’
இக்குழந்தைகளை காப்பாற்ற உதவுங்கள்.
தத்தெடுக்க ஆர்வம் இருந்தால், தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என, கோரிக்கை உலா வருகிறது.
இதன் மூலம், சட்டவிரோதமாக குழந்தைகளை விற்கும் கும்பல் செயல்படுகிறது. சமீபத்தில் பெண் குழந்தையை, 4 லட்சம் ரூபாய், ஆண் குழந்தையை 6 லட்சம் ரூபாய்க்கும் விற்க முயற்சித்ததை, மைசூரின் தொண்டு அமைப்பின் உதவியில், மங்களூரு போலீசார் கண்டுபிடித்தனர்.
இது போன்ற சட்டவிரோத செயல், மாநிலத்தின் பல இடங்களில் நடக்கக்கூடும்.கவனமாக இருக்கும்படி, போலீசார் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவால் அனாதைகளான குழந்தைகளை, சட்டவிரோதமாக தத்தெடுக்க முற்படுவது, உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கும் வந்துள்ளது.
இத்தகைய நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வஜீர் கூறியதாவது: வெளி மாநில நபர்களின், மொபைல் எண்களிலிருந்து, இது போன்ற பொய்யான தகவல்கள் பரவியுள்ளது, எங்களின் கவனத்துக்கும் வந்துள்ளது.
இதை மற்றவருக்கு பார்வர்டு செய்யக்கூடாது. எந்த குழந்தையாவது, தொந்தரவில் இருப்பது தெரிந்தால், குழந்தைகள் சகாய வாணி எண் 1098 அல்லது 14499ல் தொடர்பு கொள்ளலாம். அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கும், தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.