ஐஎஸ்ஐஎஸ் உள்பட பல சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் ஆட்சேர்ப்பு மையமாக கேரள மாநிலம் மாறி இருக்கிறது என்று அம்மாநில டிஜிபி லோகநாத் பெஹ்ரா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் லோகநாத் பெஹ்ரா. இவர், கடந்த 2014 ஆம் ஆண்டில் பினரயி விஜயன் முதல் முதலாக முதல்வர் ஆனபோது டிஜிபியாக நியமிக்கப்பட்டார். வரும் 30ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், லோக்நாத் பெஹ்ரா திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது…
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் கேரளா முன்னணியில் உள்ளது. ஆனாலும் சில பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று கூற முடியாது. கடந்த சில வருடங்களாக கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சில மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதற்கு சில கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சீருடை அணிந்து வருபவர்கள் நிரபராதிகள் இல்லை!
மாவோயிஸ்டுகள் திருந்துவதற்கு பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அந்த வாய்ப்புகளை ஏற்கவும் இல்லை; பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை!
ஐஎஸ்ஐஎஸ் உள்பட பல சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கு கேரளம் ஒரு ஆட்சேர்ப்பு மையமாக, தேர்வு மையமாக மாறி இருக்கிறது! கேரளாவில் டாக்டர்கள், இன்ஜினியர்கள் உள்பட படித்தவர்கள் அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம்!
பயங்கரவாத இயக்கங்கள் படித்தவர்களைக் குறிவைத்து மூளைச்சலவை செய்து தங்களது இயக்கங்களுக்கு ஆட்களை சேர்க்கின்றன! கல்வியறிவு பெற்றவர்கள் கூட பயங்கரவாதிகளாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது! பயங்கரவாதிகள் உடன் மலையாளிகளுக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு கவலையை ஏற்படுத்துகிறது!
கேரளத்தில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை என்று கூறமுடியாது. கேரள போலீசார் பல பயங்கரவாத செயல்பாடுகளை முறியடித்துள்ளனர். அவை என்ன என்ன என்பது குறித்து என்னால் விளக்கமாக கூற முடியாது! ஆனால் கேரள மக்கள் எதற்கும் அச்சப்பட தேவையில்லை! எந்த நிலைமையையும் சமாளிக்கும் வகையில் கேரள போலீசார் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்!
எனக்கு சிபிஐ இயக்குனர் ஆகும் வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக உள்ளது என்று கூறினார் லோக்நாத் பெஹ்ரா.
கடந்த வாரம் கூட, கேரள மாநிலத்தில் தென்பகுதியில் கொல்லம் மாவட்டத்தின் வனப் பகுதிகளில் வெடிபொருள்கள் பெருமளவில் கைப்பற்றப் பட்டன. வெடிபொருள்களை வைத்து பயங்கரவாதிகள் பயிற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. அடந்த வனப்பகுதிகள் அதிகம் கொண்ட கேரளம், பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாகவும் மாறியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தும் ஓர் அம்சமே!