வந்தவாசி அருகே பிளஸ் 2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற, கர்நாடக மாநில இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி லிங்கோத். இவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தாடிநொளம்பை பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி, வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது, அதே ஊரை சேர்ந்த 12ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த, ரமேஷ் என்பவரது 17 வயது மகளுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஒரு வாரத்துக்கு முன்பு மாணவியை சிமோகா கடத்திச் சென்றுள்ளார். மாணவியை காணாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
ஆனால் அவர் கிடைக்காததால், இதுகுறித்து வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் மாணவி பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை கொண்டனர். அதில், இருவரும் சிமோகாவில் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், கடத்தல் சம்பவம் தொடர்பாக லிங்கோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.