கோவையில் யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சி, விற்பனையில் ஈடுபட்ட ஜவுளிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், நேற்று கோவை மத்திய சட்டம், ஒழுங்கு காவல் உதவி ஆணையர் பிரேமானந்த் மேற்பார்வையில் போலீசார், கே.கே.நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பிடிபட்ட நபர் மோகன் நாயர் என்பதும், அவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
ஊரடங்கால் மதுக்கடைகள் திறக்காததால், யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்ச தொடங்கிய அவர், பின்னர் தனக்கு தெரிந்தவர்களுக்கு அதனை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து, மோகன் நாயரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 2 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்