ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக மாம்பழங்களை விற்ற சிறுமியிடம் ஒரு டஜன் மாம்பழங்களை ரூ 1.2 லட்சத்திற்கு மும்பை தொழிலதிபர் ஒருவர் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் துளசி குமாரி (11). 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஸ்ரீமல் குமார்.
இவர் சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார். பள்ளிகள் திறக்கப்படாததால் இந்த மாநிலத்திலும் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்படுகின்றன.
ஆனால் துளசிகுமாரியிடம் செல்போன் வாங்க வசதியில்லை. இதனால் அவரால் ஆன்லைன் மூலம் படிக்க முடியவில்லை.
செல்போன் வாங்குவதற்காகவே தனது தந்தையுடன் சேர்ந்து துளசிகுமாரியும் மாம்பழங்களை விற்பனை செய்து வந்தார். சிறுமியின் நிலை குறித்து மும்பை தொழிலதிபர் அமேயா ஹேட்டேவுக்கு தெரியவந்தது.
இதையடுத்து நேராக சம்பவ இடத்திற்கு வந்த அமேயா சிறுமியிடம் இருந்து 12 மாம்பழங்களை ரூ 1.2 லட்சத்திற்கு வாங்கினார்.
அதாவது ஒரு மாம்பழம் 10 ஆயிரம் வீதத்திற்கு வாங்கினார். பின்னர் அதற்கான பணத்தை சிறுமியின் தந்தையின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்தார்.
அது மட்டுமில்லை ரூ 13 ஆயிரத்திற்கு செல்போனையும் வாங்கிக் கொடுத்த அமேயா, அந்த சிறுமிக்கு ஆண்டுக்கான இன்டர்நெட் ரீசார்ஜ் வசதியையும் செலுத்திவிட்டார்.
பெண்கள் படிப்பதற்கு எந்தவித தடையும் ஏற்படக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அமேயா தெரிவித்தார்.
துளசி கடுமையாக உழைக்கக் கூடிய மாணவி. என் உதவியால் அவர் தனது கல்வியை முடித்தால் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு தேவை உதவிகளை செய்ய நாங்கள் இருக்கிறோம் என்றார் அமேயா