அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நிறுவனம் பிரமாண்டமான பலூனில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து சென்று, பூமியில் உள்ள அழகை ரசிக்கும் வகையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இது பற்றி அந்த நிறுவனத்தை சேர்ந்த ஜேன் பான்ட்டர் என்பவர் கூறியதாவது: பிரமாண்டமான பலூனில் விண்வெளி சுற்றுலாவுக்கு மக்களை அழைத்துச் செல்கின்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோம். அதற்காக 6 மீட்டர் பலூன் ஒன்றை ஹீலியம் வாயு வாயிலாக கால்பந்து மைதானத்தின் விட்டம் போன்று விரிவுபடுத்தி விண்ணில் செலுத்துகிறோம்.
இதற்காக சமீபத்தில் ஆளில்லாமல் அனுப்பிய பலூன் வெற்றிகராக விண்ணில் சென்று மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது.
இதன் காரணமாக விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கு முடிவு செய்துள்ளோம்.
இதற்கு ஒருவருக்கு டிக்கெட் விலை ரூ.1 கோடி என நிர்ணயம் செய்துள்ளோம். ஒரு முறை பயணம் செய்யும்போது கேப்டன் உட்பட 8 பேர் இருக்கலாம்.
டிக்கெட் முன்பதிவு தொடங்கியதும் 300 பேர் பணம் செலுத்தியுள்ளனர். வருகின்ற 2024ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்து விட்டது. தற்போது 2025ம் ஆண்டுக்கான முன்பதிவுதான் துவக்கியுள்ளோம்.
மேலும், பலூனில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அறை உண்டு. அதில் பூமியை காண்பதற்கு பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளியில் இருந்து கீழே உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசுவதற்கு இண்டர்நெட் வசதியுடன் தொலை தொடர்பு சாதனங்ளும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.