பெங்களூரு: 2020 ஆகஸ்டில் கே.ஜி.ஹள்ளி காவல் நிலைய எல்லையில் நடந்த கலவரத்தில் முக்கிய சதிகாரன் சையத் அப்பாஸ் (38) என்பவனை தேசிய புலனாய்வு அமைப்பு புதன்கிழமை கைது செய்தது.
அப்பாஸ் பெங்களூரு கோவிந்த்பூரில் வசிப்பவன். இந்த வழக்கு முதலில் ஆகஸ்ட் 12, 2020 அன்று கடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. 2020 ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாலை கடுகொண்டனாஹள்ளி காவல் நிலையத்திற்கு வெளியே சட்டவிரோதமாக கூடியிருந்த கொடிய ஆயுதங்களுடன் கூடிய ஒரு கட்டுக்கடங்காத கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.
அந்த கும்பல் பல போலீஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தியது. தொடர்ந்து அந்தக் காவல் நிலையத்துக்கும் தீ வைத்தது. காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனங்கள் தீ வைக்கப் பட்டதில் பெரும் சேதமடைந்தன.
செப்டம்பர் 21, 2020 அன்று என்ஐஏ இந்த வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. முன்னதாக என்ஐஏ இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 138 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சையத் அப்பாஸ், பெங்களூரு வார்டின் எஸ்.டி.பி.ஐ., கட்சியின்- நாகவராவின் தலைவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களில் பலர், எஸ்டிபிஐ., கட்சியின் உறுப்பினர்கள். அவர்களுடன் எஸ்டிபிஐ நகவாரா தலைவரான சையது அப்பாஸும் கே.ஜி.ஹள்ளி காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தீவிரமாக தாக்கி, வாகனங்களை எரித்துள்ளனர்.
பெங்களூரு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், கைதாகியுள்ள சையத் அப்பாஸை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, என்ஐஏவுக்கு அனுமதி வழங்கியது.