காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் திடீரென இடி விழுந்ததால் அபசகுனமாக இருக்குமோ என பக்தர்கள் பீதியில் உறைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது
இந்த நிலையில் நேற்று மாலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மழை பெய்த நிலையில் திடீரென உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தில் இடி தாக்கியது.
அந்த கோபுரத்தில் இடி தாங்கி இல்லை என்பதால் அந்த கோபுரத்தின் உச்சியில் உள்ள யாளியின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்தது.
மழை காரணமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஒதுங்கி இருந்ததால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இருப்பினும் கோவிலின் தெற்கு கோபுரத்தில் இடி விழுந்தது அபசகுணமாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் துயரத்தில் இருக்கும் மக்கள் இடிவிழுந்து யாழி விழுந்ததால் மேலும் ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இதுகுறித்து பிரசன்னம் பார்த்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இது குறித்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.