கோவையில் கழிவறைக்கு சென்ற குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜீவ் காந்தி என்ற நபர், கோவை ஹோப்ஸ் – விளாங்குறிச்சி சாலையில் கௌதமபுர நகரில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு 4 வயது மகள், கடந்த 30 ஆம் தேதி வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த கழிவறைக்கு அவர் சென்றுள்ளார்.
அப்போது வீட்டிற்குள் வந்த குரங்கு ஒன்று 4 வயது குழந்தையை தாக்கியுள்ளது. இதனால் பதறிப்போன குழந்தையின் தாய் கத்தி கூச்சல் போட்டுள்ளார். மேலும், தனது குழந்தையை தாக்கிய குரங்கை அவர் விரட்டிவிட்டு, குழந்தையை பார்த்துள்ளார்.
இதையடுத்து, குழந்தை தனியார் மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டு முதற் உதவி அளிக்கப்பட்டது. ஆனால், குரங்கு கடி அல்லது தாக்குதலுக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் மருந்து உள்ளதால், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் இருந்து குழந்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு குழந்தைக்கு குரங்கு கடிக்கு கொடுக்ககூடிய ஊசி போடப்பட்டு, தொடர் சிகிச்சையில் உள்ளார்.
குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள குழந்தை நல்ல முறையில் இருப்பதாகவும், ஓரிரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்தாண்டு சாய்பாபா காலனி பகுதியில் வீட்டிற்குள் குரங்கு நுழைந்ததை அடுத்து வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநகர முக்கிய பகுதியில் குடியிருப்பில் குரங்கு நுழைந்து குழந்தையை தாக்கியுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடர்பாக வனத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.