கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, விருப்பப் பாடமாக தமிழ் மொழியை எடுத்து படிக்கலாம் என்ற நிலையை மாற்றியுள்ளனர்.
மொத்தத்தில், தமிழ் மொழியை நீக்கி இருக்கின்றனர். ஹிந்தி, ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பில் இருந்து, சமஸ்கிருதம் தான் விருப்பப் பாடம் என ஆக்கி உள்ளனர்.’
அதனால், அப்பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’ என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் .
இது குறித்து, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: இது அப்பட்டமான பொய். தமிழ் எங்கும் புறக்கணிக்கப்படவில்லை. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், விருப்பப் பாடமாக தமிழ் மொழி இன்றும் உள்ளது.
இல்லை என்பதை, வைகோ நிரூபிக்க வேண்டும்.
தி.மு.க.,வினர் நடத்தும், 43 பள்ளிகளிலும், ஆங்கிலமும், ஹிந்தியும் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதற்கு எதிராக குரல் எழுப்புவாரா வைகோ?அங்கே பயிலுபவர்களுக்கு, முதலில் தமிழ் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளி பக்கம் வரட்டும்.
சமஸ்கிருதத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெறும், 22 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாகவும், புலம்பி இருக்கிறார் வைகோ.
இப்படி அவர், பல முறை பொய்யாக சொல்லி, அதற்கு விளக்கமும் கொடுத்த பின்பும், அதையே சொல்கிறார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சமஸ்கிருதத்துக்கு பதிலாக, சீன, ஸ்பானிஷ், ஜெர்மனி, பிரஞ்சு, ஜப்பான் மொழிகளில், எதையாவது ஒன்றை கற்பிக்கலாம் என்று சொல்லி, தனது வாடிகன் விசுவாசத்தையும் காட்டி இருக்கிறார்.
தமிழகத்தில் இருக்கும் தனியார் பள்ளிகள் அனைத்தும், அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அரசிடம் அனுமதி பெற்று தான் இயங்குகின்றன. அந்த தனியார் பள்ளிகள் அனைத்திலும், ஹிந்தியும், ஆங்கிலமும் தான் பயிற்று மொழியாக இருக்கிறது. தமிழ் பேசினாலே அபராதம் விதிக்கின்றனர்.
தனியார் பள்ளிகளில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர முயற்சிக்காதது ஏன்? தி.மு.க.,வினர் நடத்தும், 43 பள்ளிகளிலும் தமிழ் மொழி, பயிற்று மொழி கிடையாது. ம.தி.மு.க.,வை தி.மு.க.,விடம் அடமானம் வைத்து விட்டு, பெயரளவில் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் வைகோ, அதற்காக, தி.மு.க.,விடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
அரசு அல்லது தி.மு.க.,வுக்கு எதிராக கருத்து சொன்னால், ஓய்வூதியம் ரத்தாகி விடும் என்பதால், அரசும், தி.மு.க.,வும் விரும்புவதைச் செய்கிறார்.
குடும்பத் தலைவிக்கு ஊக்கத் தொகை மாதம்தோறும் வழங்கப்படும்; காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என நிறைய விஷயங்களை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது எதையும் செய்யவில்லை. மக்கள் கேட்கத் துவங்கி விட்டனர்.
இப்படிப்பட்ட பிரச்னைகளை மறைத்து, புதியவற்றை கிளப்பி, மக்கள் எண்ணத்தை மடை மாற்றம் செய்ய, தி.மு.க., முயற்சிக்கிறது. அதற்காக, வைகோவை விட்டு, இப்படி அறிக்கை வெளியிடச் செய்திருக்கின்றனர். வைகோவின் பரிதாப நிலையை கண்டு வருத்தப்படத்தான் முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.