திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தமிழ்ப் பஞ்சாங்கம், ஆதார் அட்டை, மணி, 10 ரூபாய் நாணயங்களை வைத்து பூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலானது கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி சிறப்பு வாய்ந்தது.
சுப்பிரமணிய சுவாமியின் பக்தர்களுக்கு கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய சுவாமி உத்தவிடுவார்.
இது போல் கனவில் உத்தரவு வந்தவர்கள் கோயில் நிர்வாகத்திடம் விவரங்களை கூறுவர். பின்னர் சுவாமியிடம் பூப்போட்டு கேட்டு அதில் உத்தரவு வந்தபின்னர் அந்த கனவில் சொன்ன பொருட்களை பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.
இவ்வாறு கோயில் முன் மண்டப தூணில் வைத்துள்ள உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவு வரும் வரை அந்த பெட்டியில் பழைய பொருட்கள் இருக்கும்.
இதுபோல் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள காலத்தில் அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது பாசிட்டிவாகவும் இருக்கும் , நெகட்டிவாகவும் இருக்கலாம். இந்த நிலையில் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த லதா சம்பத்குமாரின் கனவில்தான் இந்த உத்தரவு வந்துள்ளது.
அவரது கனவில் தமிழ் பஞ்சாங்கம், ஆதார் அட்டை, மணி, ரூ 10 நாணயங்கள் ஆகிய பொருட்களை வைத்து உத்தரவு பெட்டியில் சனிக்கிழமை வைத்து பூஜிக்கப்பட்டது.
பாம்பு பஞ்சாங்கமானது பாரம்பரியமிக்கது, நமது பாரத பாரம்பரியம் உயிர்ப்புடன் எழுச்சி பெறும். ஆதார் அட்டையின் மூலம் இந்த தேசத்தில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
மணி என்பது கோயில்களில் ஒலிக்கக் கூடியது. இதனால் பக்தர்களும் நாட்டு மக்களும் சுபிட்சம் பெறுவார்கள். 10 ரூபாய் நாணயங்கள் பொருளாதாரத்தை குறிக்கும். நாட்டின் பொருளாதாரம் சிறப்புற்று விவசாயம், தொழில் துறை வளர்ச்சி பெறும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா வல்லரசாக மாறும் என்பதையே இந்த பொருட்கள் உணர்த்துவதாக குறிப்பிடப்படுகிறது.
லதா சம்பத்குமார் தங்கள் வீட்டில் பஞ்சாங்கத்தை வைத்தால் வீட்டிற்கு நல்லது என கணவரிடம் கூறிவிட்டு தூங்க சென்ற போது வீட்டுக்கு நல்லது ஏற்பட்டால் போதாது, நாட்டுக்கும் நல்லது ஏற்பட வேண்டும் என முருகன் கனவில் தோன்றி கூறியதை அடுத்தே லதா கோயில் நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த மே மாதம் முதல் வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள் தூள் வைத்து பூஜிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.