சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூரு மங்களூரு ரயில் பாதையில் பயணிகள் இயற்கையை ரசிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள விஸ்டாடெம் பெட்டிகளுடன் கூடிய ரயில் இயக்கப் பட்டுள்ளது.
இந்திய ரயில்வே சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருவதுடன், மலைப் பிரதேசங்களில் ரயிலில் பயணிக்கும்போது பயணிகள் இயற்கையை ரசிக்கும் வகையில் ரயிலை மெதுவாக இயக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரயில்வேத் துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், சுற்றுலாவுக்காக சிறப்பு வழித்தடங்களையும் அறிவித்து ரயில்கள் அதில் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் ‘விஸ்டாடோம்’ பெட்டிகளை தென்மேற்கு ரயில்வே வடிவமைத்துள்ளது. உலகத் தரத்திலான இந்தப் பெட்டிகளின் பக்கவாட்டிலும் மேற்கூரைப் பகுதிகளிலும் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு, பயணிகள் இயற்கையை வெகுவாக ரசிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்துள்ள பதிவில், தென்மேற்கு ரயில்வே யஸ்வந்த்பூர் மங்களூரு இடையே விஸ்டாடெம் பெட்டிகளுடன் கூடிய ரயில் இயக்குகிறது. இந்த பெட்டிகளின் வசதிகளைப் பாருங்கள் என்று வீடியோவும் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பெட்டியின் சிறப்பம்சங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்… ‘விஸ்டாடோம் பெட்டியில் உள்ள 44 இருக்கைகளும் இரண்டு இரண்டாக அமைக்கப் படு, அவை பயணிகளின் வசதிக்காக 180 டிகிரி கோணத்தில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை திருப்பி அமைத்து, பக்கவாட்டு கண்ணாடி ஜன்னலின் நேராக அமைத்துக் கொண்டு இயற்கையைக் கண்டு ரசிக்கலாம்.
மேலும், இதில் தீ விபத்தைத் தடுப்பதற்கான வசதிகள், கண்காணிப்பு கேமரா, எல்இடி திரை, மொபைல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவை உள்ளன. முதல் கட்டமாக இரு பெட்டிகள் பெங்களூரு – மங்களூரு விரைவு ரயிலில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் இன்று தனது முதல் சேவையைத் தொடங்கியுள்ளது.
சுற்றுலா வழித்தடங்களில் இதேபோல் மேலும் பல ரயில்களில் இந்த வகை பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க சிறிய அளவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.