கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவது கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருப்பதையும், கடந்த கால பெருந்தொற்றுகளின் வரலாறுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவில் நிச்சயம் 3வது அலை வந்தே தீரும். அதனை நம்மால் தவிர்க்க முடியாது.
ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் கூடுகின்றனர். இது வலி மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.
சுற்றுலா, யாத்திரை பயணம், மத திருவிழாக்கள் என அனைத்தும் நமக்கு தேவைதான். ஆனால், இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இவற்றை திறந்து, தடுப்பூசி இல்லாமல் மக்களை கூட்டம் மிகுந்த இடங்களுக்கு கட்டுப்பாடின்றி நடமாட விடுவது கொரோனா 3வது அலைக்கான சாத்தியக்கூறை அதிகப்படுத்தும்.
ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார இழப்பை விட, ஒரு கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளித்து அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாக இருக்கும்.
ஆகவே, இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே சிறந்தது. மேற்கூறியவற்றை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.