சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தயாரிப்பாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் உள்ள மீரா ரோடு, சாந்தி நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி விசாரித்தனர்.
இதில், திரைப்பட தயாரிப்பாளர் கன்யாலால் பால்சந்தானி மற்றும் அவருடைய உதவியாளர் வனிதா இங்கலே உட்பட 3 பேர் சேர்ந்து விபச்சாரம் நடத்தியது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி, அந்த 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை விபச்சாரத்தில் தள்ளியது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில், சினிமா ஆசையால் இப்படியானவர்களிடம் சிக்கிக் கொண்டு வாழ்க்கையை தொலைக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.