சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் தங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை கலந்து விற்பனை செய்வதாக மருத்துவர் ஒருவர் அளிக்க புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஐயப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்த திரிவேணி(35) கடந்த 22ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதில் துரைசாமி சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகையில் வாங்கிய தங்க செயினுக்குள் அதிக எடைக்கூடிய வெள்ளி நகையை சேர்த்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
2015ஆம் ஆண்டு முதல் 2019 வரை பல தங்க நகைகளை அதே கடையில் வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து சரவணா கடை மேனேஜரிடம் முறையிட்ட போது தவறு நடந்திருப்பதாக கூறி மன்னிப்பு கேட்டு வேறொரு செயினை மாற்றி கொடுத்தார்.
அதனை தொடர்ந்து மீண்டும் சரவணா ஸ்டோரில் வாங்கப்பட்ட மற்றொரு நகைக்குள் காப்பரை மறைத்து வைத்து மோசடி செய்திருப்பது தெரியவந்ததையடுத்து உடனடியாக மாம்பலம் காவல் நிலையத்தில் திரிவேணி புகார் அளித்தார்.
சரவணா ஸ்டோர் நகை கடை மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மாம்பலம் போலீசார் போலி தங்க நகைகளை விற்றதாக சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.