மதுரை: திமுக தேர்தலின் போது, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெட்ரோல் மற்றும் டீசல்,சமையல் எரிவாயு ஆகியவை குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுக்க திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்சியினரை வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர் அலுவலகம் வாசலில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செல்லூர் கே. ராஜூ பேசியது:
அதிமுக அரசானது, சொன்ன திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக, மத்திய அரசு சுமூக உறவு வைத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியது. மதுரை நகரில் பல பாலங்கள், பெரியார் பஸ் நிலைய விரிவாக்கம், தமுக்கம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டன. அதுபோல், திமுக அரசானது, மக்கள் மத்தியில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.மதுரை அருகே பசுமலையில், அதிமுக மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வே. ராசன் செல்லப்பா தலைமையில் வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்டோர், திமுக., தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
அப்போது, தமிழகத்தில் வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக உள்ளது என அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது… அதிமுக குறித்து கடந்த பொதுத் தேர்தலில் திமுக மக்களிடம் பொய் பிரச்சாரங்கள் செய்தும், பொய் வாக்குறுதிகளை அளித்தும் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் கேஸ் ரூபாய் 100 மானியம், குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உள்ளிட்ட எந்தவித வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
மாறாக அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் உள்பட 16 வகையான பொருட்கள் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு ரத்து என கூறி மாணவர்களை ஏமாற்றி இந்த அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. இதனை கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின் பேரில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன் முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.