ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவேடகம் சோழவந்தான் படித்துறைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என்பதால், அதனைத் தவிர்க்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா 3- வது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, ஆடி மாதம் 18 ஆடிப் பெருக்கு வைபவம், ஆடி வெள்ளிக் கிழமைகள், ஆடி அமாவாசை என இவற்றைக் குறிவைத்து, இந்துப் பண்டிகைகளை கொண்டாட விடாமல் அரசு தடை செய்துள்ளது.
இதனால், இந்த ஆண்டு ஆடி அமாவாசை தர்ப்பணம் ஆற்றுப் படுகையில் செய்வது தவிர்க்கப் படும் என்று திருவேடகம் கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.
வருடா வருடம், ஆடி அமாவாசை, அன்று மக்கள் இறந்த முன்னோர்களான பித்ருக்களை நினைத்து புனித நீராடி கடல் மற்றும் ஆற்று படுகையில் பித்ரு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரானா பரவல் ஊரடங்கு மற்றும், போலீஸ் துறையின் அராஜக நடவடிக்கைகள் காரணமாக, மதுரை பேச்சியம்மன் படித்துறை, திருப்புவனம், திருவேடகம், சோழவந்தான் உள்ளிட்ட வைகை கரையோர சுற்று வட்டார பகுதிகளில் தர்ப்பணம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று, அந்த கிராம தலைமை புரோகிதர்களாலும் கிராம பொது மக்களாலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை ஆற்றுப் படுகையில் கூடிய ஹிந்து ஆன்மிக அன்பர்களின் நெருக்குதல் காரணமாக தர்ப்பணம் செய்ய உதவியாக முன்வந்த புரோஹிதர்களை துரத்தித் துரத்தி லத்தியால் அடித்து விரட்டி, போலீசார் கடும் சாபங்களை வாங்கிக் கொண்டனர்.
கடந்த வருடம் இதே போல் தடை விதித்து நெருக்குதல் கொடுத்து அடித்து விரட்டிய ஸ்ரீரங்கம் போலீசார் முன் அதிமுக., அரசுக்கு தர்ப்பணம் செய்துவிட்டதாக சிலர் ஆற்றாமையாலும் ஆத்திரத்துடனும் சாபம் விட்டனர். இந்நிலையில் அதிமுக., அரசு போய் திமுக., அரசு வந்திருக்கிறது. அதுவும் இது போன்ற நெருக்கடி கொடுத்து, முன்னோர்களுக்கான கடமையைச் செய்ய விடாமல் தடுப்பதால், இதற்கும் தர்ப்பணம் செய்வோம் என்று சிலர் சமூகத் தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.