மும்பையில் கணபதி விழா, சுதந்திர தின விழா ஆகியவற்றையொட்டி போலீஸார் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், திடீரென நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாதர், பைகுலா ரயில் நிலையங்கள், நடிகர் அமிதாப் பச்சன் வீடு ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். உடனே போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு இடங்களுக்கும் மோப்ப நாயைக்கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் போலீஸாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தீவிர சோதனை நடத்தியதில் எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வந்த செய்தி புரளி என்று தெரியவந்தது. போன் செய்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர.
இதில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
தானே மாவட்டம், மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அவர்களில் ஒருவர் குடிபோதைக்கு அடிமையானவர். அவர்தான் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருந்தார். அவருடனிருந்த மற்றொரு நபரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர்கள் குடிபோதையில் இதைச் செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலும் இரவில்தான் விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டலிலும் தற்போது பிடிபட்டவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது