இந்தியாவில் இந்த ஒயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போன்களை அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்படி ப்ளூடூத் ஹெட் போனில் பேசிக் கொண்டே இருந்த புதுமாப்பிள்ளை ஒருவர், ஹெட்போன் வெடித்து சிதறியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ராகேஷ். அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் ராகேஷ், தனது படிப்புக்கு பயன்படும் வகையில் ஒயர்லெஸ் ப்ளூடூத் ஹெட் போன் ஒன்றை வாங்கி உள்ளார்.
தொடர்ந்து வழக்கம் போல், ராகேஷ் புது ஹெட்போனை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, திடீரென ராகேஷ் வாங்கியிருந்த ப்ளூடூத் ஹெட்போனில் மின்சாரம் பாய்ந்து, வெடித்து சிதறியது ஹெட்போன்.
திடீரென வெடித்து சிதறிய ஹெட்போனினால், ராகேஷின் காதில் சவ்வு கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டிய நிலையில் அதே இடத்தில் மயங்கி விழுந்த ராகேஷை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராகேஷூக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. ப்ளூ டூத் ஹெட்போன் பயன்படுத்தும் போது, பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பேசிய மருத்துவர் எல்.எம்.சுந்த்லா, ‘புளூடூத் சாதனம் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் ராகேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறான், சிகிச்சை பலனின்றி அவர் இறந்திருக்கிறார்.
எனக்கு தெரிந்தவகையில் நாட்டிலேயே இது போன்ற சம்பவத்தில் முதல் முறையாக இப்போது தான் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
பொதுவாக நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துபவர்களும், வாகனங்களில் செல்வோரும் தற்போது புளூடூத் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்காகவும் மாணவர்கள் புளூடூத் இயர்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சூழலில் புளூடூத் சாதனம் வெடித்துச் சிதறி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான காரணம் முழுமையாக தெரியாத நிலையில், புளூடூத் சாதனங்களை பயன்படுத்தும் போது சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக நேரம் சார்ஜில் வைத்திருப்பதும், புளூடூத் சாதனம் சூடாக இருந்தாலும் அதீத எச்சரிக்கையை கடைப்பிடிப்பது நல்லது.