கேரளாவில் கொரோனா நிபந்தனைகளை மீறி தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகர் மம்மூட்டி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் ஊரடங்கு சட்ட விதிகளை கடுமையாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி திருமணம் மற்றும் இறுதி சடங்கு உள்பட நிகழ்ச்சிகளில் 25 நபருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது. அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோழிக்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் ரோபோட் அறுவை சிகிச்சை மைய திறப்பு விழா கடந்த 2 தினங்களுக்கு முன் நடந்தது. இதில் பிரபல நடிகர் மம்மூட்டி, நகைச்சுவை நடிகர் ரமேஷ் பிஷாரடி மற்றும் பலர் கலந்து கெண்டனர்.
அங்கு மம்மூட்டியை பார்க்க ஏராளமான ரசிகர்களும் திரண்டிருந்தனர். இதையடுத்து, கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக நடிகர்கள் மம்மூட்டி, ரமேஷ் பிஷாரடி, மருத்துவமனை நிர்வாகிகள் உள்பட 300 பேர் மீது ஏலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.