ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தியிருந்த மின்சார ரயில் ஓட்டுநர் இல்லாமல் 300 மீட்டர் ஒடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சார ரயில் என்ஜீனின் பாண்டோகிராஃப் (Pantograph) உடைந்து ரயில் நின்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை 6ல், 8 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்து. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இந்த ரயில் ஓட்டுநர் இல்லாமல் தானாக உருண்டு சுமார் 300 மீட்டர் தூரம் சென்றது.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சார ரயில் என்ஜீனின் மேலே மின்கம்பியில் உரசி செல்லும் பாண்டோகிராஃப் உடைந்து சேதமுற்றதால் மின்சார கம்பியில் சிக்கி ரயில் நின்றது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அங்கு ரயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நடந்த சம்பவம் குறித்து கூறும்போது, ரயில் உருண்டு வந்த பாதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாராமரிப்பின்றி ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட பாதையாகும்.
நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் என்ஜீனின் சக்கரம் நகராமல் இருக்க தண்டவாளத்தில் இரும்பு தடுப்பு கம்பி வைப்பது வழக்கம்.
ஆனால், இன்று ரயில்வே ஊழியர்கள் மறதியால் இரும்பு கம்பி வைக்காததால் ரயில் தானாக நகர்ந்ததாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்தது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் மேலும் விசாரனை நடத்தி வருகின்றனர்.