கொரோனா சூழலால் சுதந்திர தின நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தியச் சுதந்திர தின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலக கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 09.00. மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.
கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி / ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு பொதுமக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவினைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில் கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.