நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பரம் வீர் சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜர்(கவுரவ லெப்டினன்ட்) யோகேந்திர சிங் யாதவுக்கு, இந்திய குடியரசுத் தலைவரின் கவுரவ கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ராணுவச் செயலாளரும் கையெறி குண்டு படைப்பிரிவின் உயர் அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சிரோஹி, கேப்டன் பதவிக்கான சின்னத்தை புதுதில்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் அணிவித்தார்.
போர் காலத்தில் வீர தீர செயல் புரிந்ததற்காக, 19 வயதில் பரம் வீர் சக்ரா விருது பெற்றவர் அதிகாரி சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ். இவரது வீரதீர செயலால், டைகர் மலைப் பகுதியின் முக்கிய இடங்களை, 18 கையெறி குண்டு வீரர்களால் கைப்பற்ற முடிந்தது.
இவரது வீரதீர செயல் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி நடந்தது. கதக் கமாண்டோ படைப்பிரிவை இவர் தானாக முன்வந்து வழிநடத்தி சென்றபோது, டைகர் ஹில் பகுதியில் மூன்று முக்கிய பதுங்கு குழிகளை கைப்பற்றும் பணி வழங்கப்பட்டிருந்தது.
பனி மலை உச்சிக்கு அவர் ஏற தொடங்கியதும், பதுங்கு குழியில் இருந்த எதிரிகள் இவரை கண்டு பிடித்து இயந்திர துப்பாக்கி மற்றும் ராக்கெட் குண்டுகளால் தாக்கத் தொடங்கினர்.
மூன்று குண்டுகள் தாக்கிய நிலையில், யோகேந்திர சிங் யாதவ் தொடர்ந்து மலை உச்சிக்கு ஏறி, பாகிஸ்தான் பதுங்கு குழிக்கு தவழ்ந்து சென்று கையெறி குண்டை வீசினார். இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவரது ஊக்கம், மற்ற வீரர்களையும் மலை உச்சிக்கு வரவழைத்தது. பலத்த காயம் அடைந்த நிலையிலும், யோகேந்திர சிங் யாதவ், ஏழு வீரர்களுடன் 2வது பதுங்கு குழி நோக்கி சென்றார்.
அந்த பதுங்கு குழியும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 15 குண்டு காயங்களுடன், அவரது கை உடலில் சதை மற்றும் தோலில் தொங்கி கொண்டிருந்தது.
ஈடு இணையற்ற அவரது வீரதீர செயல், அவருக்கு போர்க்காலத்தில் அளிக்கப்படும் பரம் வீர் சக்ரா விருதை பெற்று தந்தது.
பாதுகாப்பு படையில் தற்போது இருக்கும் அரிய அதிகாரிகளில் ஒருவராக இவர் உள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் கவுரவ கேப்டன் பதவி வழங்கப்பட்ட 1695 ஜூனியர் அதிகாரிகளில், சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவும் ஒருவர்.