மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவி ஏற்றுவிட்டேன் என்று தவத்திரு சுவாமி நித்யானந்தா பேஸ்புக்கில் அறிவித்துக் கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஆதினத்தின் 292வது ஆதினம் அருணகிரிநாதர் மறைந்த நிலையில் 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுக் கொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும், நாத்திக ஆட்சியாளர்கள் மற்றும் இந்துமத விரோதிகளின் அரசியல் சதிகளால் இந்தியாவை விட்டே வெளியேறிய தவத்திரு சுவாமி நித்தியானந்தா, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு ஏற்கெனவே அருணகிரிநாதரால் தான் இளைய ஆதினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுவாமி நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார். சுவாமி நித்யானந்தா, மதுரை ஆதினமாக, பொறுப்பேற்ற நிலையில் கைலாசா நாடு, ஆதின மட செயல்பாடுகளின் வழிகாட்டுதல் குறித்தும் 8 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது..
அதில், மதுரை ஆதினத்தின் 292வது சன்னிதானமான அருணகிரிநாதர் மறைவை அடுத்து கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 293 வது மதுரை ஆதினம் என கூறி தனக்கான பெயரை 293வது ஜகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.