மணிப்பூர் ஆளுநராக பாஜக., மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதை அடுத்து, சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத் மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், தமிழக பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
தஞ்சாவூரில் 1945 பிப்ரவரி 16ல் பிறந்தவர் இல.கணேசன். இலக்குமி ராகவன் – அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்த கணேசன், சிறு வயதில் தந்தையை இழந்தவர். பின்னர் தனது மூத்த சகோதரரின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ்., அமைப்பின் செயல்பாடுகளால் ஈர்க்கப் பட்டு, சிறு வயதிலேயே அந்த அமைப்பின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் திருமணம் செய்து கொள்ளாமல், பொதுவாழ்வில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக, சஹ ப்ராந்த பிரச்சாரக் ஆக கால் நூற்றாண்டு காலம் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றியவர்.
1991 ஆம் ஆண்டு பாஜக.,வின் வளர்ச்சிக்காக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினால் அனுப்பப்பட்டு மாநில அமைப்பு பொதுச்செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர்.
தலைசிறந்த பேச்சாளர், நல்ல எழுத்தாளர், திறமையான நிர்வாகி, கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரோடும் நல்ல தொடர்புடையவர் என பன்முகத் தன்மை கொண்டவர். கட்சித் தொண்டர்களை பாசத்தோடு அரவணைத்தவர்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில ஆளுநராக 2017ல் நியமிக்கப்பட்ட போது, காலியான அவரது இடத்திற்கு இரண்டு ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். அதே நஜ்மா ஹெப்துல்லா தற்போது ஓய்வு பெறும்நிலையில், அதே மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்.ஜி என்று அனைவராலும் பாசத்தோடு அழைக்கப்படுபவர். ஆர்.எஸ்.எஸ்.,ஸில் பணியாற்றி தொடர்ந்து பாஜக., தேசிய செயலர், துணைத்தலைவர், தமிழக பா.ஜ., தலைவர், மாநிலங்களை உறுப்பினர் என பல படிநிலைகளைக் கடந்தவர். தற்போது, ஆளுநராகவும் பொறுப்பேற்கிறார்.