பொன்னேரி அருகே வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் டிராக்டர் மெக்கானிக்கான கோபி.
இவர் தமக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக கடக்கால் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 2 அடி ஆழம் பள்ளம் தோண்டிய போது பாறை போன்ற பொருள் கடப்பாரையில் தட்டுப்பட்ட நிலையில், அதனை பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர்.
அதில் பெருமாள், ஆண்டாள், அலமேலு ஆகிய 3 சாமி சிலைகள் பூமிக்கடியில் புதைந்து இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு தீபமேற்றி, கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு வழிபாடு நடத்தினர்.
தங்களது ஊரில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை இங்கேயே கோவிலில் வைத்து வழிபாடு நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை மீட்டு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல் பாறை சிலைகளா அல்லது பச்சை நிறத்தில் இருப்பதால் மரகத சிலையா என்பது குறித்து தொல்லியல் துறையினர் கொண்டு ஆய்வு செய்யப்படும் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.