குடியாத்தத்தில் குழந்தை இல்லாத விரக்தியில் கணவரின் முதல் மனைவியின் பிள்ளைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த சித்தியை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் பெயின்டர் சேட்டு (35). இவரது மனைவி ஈஸ்வரி. 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இதனால், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வேணி (29) என்பவரை சேட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சேட்டு தினசரி காலை 5.30 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவார். இதனால், ஈஸ்வரியின் பிள்ளைகளுக்கு சித்தி வேணி பாதுகாவலராக இருந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஒரு மாதமாக சேட்டுவின் முதல் மனைவியின் 8 வயதுடைய மகனை வேணி, அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு 8 வயது சிறுவனை வேணி சூடு வைத்து சித்ரவதைசெய்துள்ளார். இதை, அதே பகுதியில் உள்ள பெரியம்மா மரியா என்பவரிடம் சிறுவன் தெரிவித்து அழுதுள்ளார்.
சிறுவனுக்கு உடலில் பல இடங்களில் சூடு கொப்புளம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மரியா, குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்தார்.
அதன்பேரில், நகர காவல் ஆய்வாளர் லட்சுமி விரைந்து சென்று விசாரணை செய்தார். அதில், இரண்டு திருமணம் செய்தும் குழந்தை பிறக்காத விரக்தியில் இருந்த வேணி, 8 வயது சிறுவனை சூடு வைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, வேணியை காவல் துறையினர் கைது செய்து, சிறுவனை அவரது பெரியம்மா மரியா பராமரிப்பில் இருக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.