அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி வரும் 2022 ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்படும் என தமிழக சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். அரசுக்கு 6480 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
அரசுப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தில் மகன், மகள் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள். ஊழியர் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியில் அமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும்
சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக அதிகரிக்கப்படும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
அரசுப் பள்ளியில் இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் விகிதாச்சார எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும். பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும்.