27 வயதான இளைஞர் ஒருவர், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூரில் வசித்து வந்துள்ளார். இவர் வசித்து வரும் பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை இவர் காதலித்து வந்துள்ளார்.
அதே சமயம், வேறொரு பெண்ணையும் இவர் காதலித்து வந்துள்ளார். பல நாட்களாக ஒரு காதலிக்கு தெரியாமல் மற்றொரு காதலியை சந்தித்து வந்துள்ளார். இப்படி சந்தோஷமாக இரண்டு காதலியுடன் வாழ்ந்து வந்த இளைஞரின் ஏமாற்று வேலை குறித்து, ஒரு காதலியின் உறவினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவர் திருமண பேச்சுவார்த்தை எடுத்த போது, அந்த பெண்ணின் உறவினர் இந்த இளைஞரை குறித்து கூறியுள்ளார்.
இதை பற்றி அறிந்த இரண்டு காதலிகளும், நான் தான் அவனை திருமணம் செய்து கொள்வேன் என்று கடுமையான போட்டி போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இது குடுமிப்பிடி சண்டை அளவுக்கு போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் பெரியவர்களின் சமாதானம் எடுபடவில்லை.
வேறு வழியின்றி, விளையாட்டுப் போட்டிகளைப் போல டாஸ் போட்டு பிரச்சனையை தீர்க்க ஊர் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு 2 இளம்பெண்களும், இளைஞரும் சம்மதித்ததை அடுத்து, நல்ல நாள் ஒன்றை பார்த்து அன்று அனைவரும் ஒன்று கூடினர்.
அவர்களின் திட்டப்படி, டாஸ் போட்டதில் பூ விழுந்த பெண்ணுக்கு ‘தல’யை (காதலனை) திருமணம் செய்து வைக்க முடிவானது. அப்போது டாஸில் தோற்ற பெண், ஸ்போர்ட்டிவாக வெற்றி பெற்ற பெண்ணை கட்டியணைத்து, கை குலுக்கிச் சென்றது பெரும் ஹைலைட்.
ஒரு பக்கம் இவர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாலும், மற்றொரு பக்கம் காதலனின் கன்னத்தில் ஒரு பளார் விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பிறகு, பெரியவர்கள் முன்னிலையில், டாஸ் வென்ற இளம்பெண்ணுடன் இளைஞருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இரு இளம்பெண்கள் போட்டியில் டாஸ் போட்டு மணமகன் முடிவு செய்யப்பட்ட இந்த திருமணம், தற்போது வைரலாகி வருகிறது.