குண்டூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்ததால் பள்ளிக்குள் புகுந்த உறவினர்கள் ஆசிரியரை சரமாரி தாக்கினர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டிசெரு கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவி ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை வகுப்பறையில் இருந்து வெளியே வரச்சொல்லி அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து ஆசிரியர் தான் எதையும் செய்யவில்லை என்றும் சரியாக படிக்காததால் கண்டிப்பதாகவும் இதனால் தவறுதலாக புரிந்து கொண்டு தன்னை தாக்க வேண்டாம் எனக் கூறினார்.
இதனை அடுத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் உறவினர்களைத் தடுத்த நிலையில் அவர்கள் மீது உறவினர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.