கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த டீ மாஸ்டரை தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் பாக்யராஜ்(42). இவர் கோவை வெங்கிட்டபுரம் பகுதியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி பாக்யராஜ் தலை மற்றும் கையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து புகாரின பேரில் கோவை சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் பாக்யராஜை தாக்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதும், பின்னர் அவரது தலையில் கல்லைபோட்டு தாக்கிவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, அந்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, அவரை நேற்று சாய்பாபா காலனி போலீசார் கைதுசெய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.