திருமங்கலத்தில் பொதுகோவிலினுள் வைத்த விநாயகர் சிலையை இரவில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அகற்றி, கண்மாயில் வீசியதால் இந்து முன்னணியினர் ஆத்திரம் அடைந்தனர். காவல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் முன்பு வந்து தங்களுடைய செலவில் அதே போல ஒரு சிலையை இந்து முன்னணியினருக்கு வாங்கிக் கொடுத்த வினோதம் இன்று நிகழ்ந்தது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் உள்ள செங்குளம் பகுதியில், இரவு நாலரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலை, அக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலினுள் வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் , இரவோடு இரவாக அருகில் உள்ள கண்மாய் நீரில் கரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட இந்து முன்னணி மாவட்டத் தலைவர் அழகர்சாமி முன்னிலையில் , இந்து முன்னணியினர் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, கண்மாய் நீரில் கரைத்த விநாயகர் சிலையை ஒப்படைக்க கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
தமிழக அரசு ,விதிமுறையை மீறி வைத்த விநாயகர் சிலையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், காவல்துறை, வருவாய் துறையினரும் , பொது கோவிலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றி , கண்மாய் நீரில் தூக்கி வீசினர்.
இதைக் கண்டித்து, இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வேறுவழியின்றி, காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் புதிதாக சிலையை விலைக்கு வாங்கி, இந்து முன்னணியினரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய சிலையை பெற்ற இந்து முன்னணியினர் , செங்குளத்தில் பொது கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகின்றனர் .
அரசு அதிகாரிகளே விநாயகர் சிலையை விலைக்கு வாங்கி இந்து முன்னணியினரிடம் கொடுத்த விநோத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.