கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த விஜயலட்சுமி தனது மகள் அஞ்சலியுடன் தில்லியில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவரும் கேரளாவுக்கு வந்தனர். அதே இரயிலில் கோவையை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணும் வந்துள்ளார்.
இதனையடுத்து ரயில் திருவனந்தபுரம் வந்த போது 3 பேரும் ரயில் பெட்டியில் மயங்கி கிடந்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து 3 பேருக்கும் மயக்கம் தெளிந்த பிறகு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சேலத்தில் இரவு உணவு வாங்கியதாகவும், கழிவறைக்கு சென்று விட்டு வந்த பிறகு சிறிது நேரத்தில் உணவை சாப்பிட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயங்கி விட்டதாகவும் காவல்துறையினரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
அதன் பிறகுதான் அவர்கள் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்து கலந்து நகைகள் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்க பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது இந்த கொள்ளை சம்பவத்தில் உத்தரப் பிரதேசத்தில் வசித்து வரும் அக்சர் என்பவர் தொடர்பு உடையதாகவும், அவர் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.