Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் தேரில் வந்து அருளும் நாதர்!

தேரில் வந்து அருளும் நாதர்!

puri jagannath
puri jagannath

விஷ்ணு பக்தரான இந்திரத்யும்னன் பகவானை நேரில் காணப் பெரும் விருப்பமாக இருந்தார். ஒரு சமயம் அவரது அவைக்கு பகவானின் விருப்பப்படி ஒரு விஷ்ணு பக்தன் வந்து நீலமாதவரைப் பற்றிப் புகழ்ந்து பேச நீலமாதவரை தரிசிக்க ஆவலுற்றார்.

தேர்ந்தெடுத்த சிலரைத் திக்கெட்டும் அனுப்பி நீலமாதவரின் இருப்பிடத்தை அறிந்துவர கட்டளையிட்டார். வித்யாபதி என்பவரை தவிர மற்றவர்கள் தோல்வியுடன் திரும்பினர் . வித்யாபதி பல இடங்களில் சுற்றி முடிவில் “சவாரா” என்னும் இனமக்கள் வசிக்கும் இடத்தில் “விஸ்வவசு” என்பவரின் வீட்டில் சில காலம் தங்கினார்.

விஸ்வவசு தன் விருந்தாளியின் சேவைக்கு தன் மகளை நியமித்தார். பின்னர் விஸ்வவசுவின் வேண்டுகோளுக்குகிணங்க அவரின் மகளான லலிதாவை மணம் புரிந்தார். வித்யாபதி தனது மாமனாரான விஸ்வவசுவின் செயல்களினால் கவரப்பட்டு அவர் எங்கு தினந்தோறும் செல்கின்றார் என்று விசாரிக்க, அவளும் நீலமாதவரை தரிசிக்க தனது தந்தை ரகசியமாக தினமும் செல்வதாக கூறினாள் .

வித்யாபதியின் முக்கிய பயணத்தின் நோக்கமே நீலமாதவரை தரிசிப்பதும் தனது அரசரிடம் நீலமாதவரின் இருப்பிடத்தை அறிவிப்பதுமே ஆகும் . அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. தன் மனைவியிடம் நீல மாதவரைக் காண ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

மிகவும் வற்புறுத்திய பின் விஸ்வவசு வித்யாபதியின் கண்களைக் கட்டி நீலமாதவரின் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். தன் மனைவி வஸ்திரத்தில் மறைத்துக் கொடுத்திருந்த கடுகை வித்யாபதி போகும் வழியெல்லாம் இரகசியமாக சிந்திக்கொண்டே சென்றார்.

நீலமாதவரின் கோவிலை அடைந்ததும் வித்யாபதி கண்கட்டை அவிழ்த்து விடப்பட்டார், நீலமாதவரின் அற்புதமான அழகில் மனதைப் பறிகொடுத்த வித்யாபதி , பக்திப்பரவசத்துடன் ஆடியும் , பாடியும் தன் வழிபாட்டை செலுத்தலானார். அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. ” வித்யாபதி நீல மாதவரை தரிசித்ததை உனது அரசருக்கு தெரிவிப்பாயாக”. பிறகு விஸ்வவசு இதை அறிந்தார்.

அதே அசரீரி விஸ்வவசு வெகுகாலமாக மலராலும் , வேர்களாலும் பூஜித்தமைக்கு என் ஆசிகள். எனது பக்தன் இந்திரத்யும்னன் அளிக்க இருக்கும் இராஜ மரியாதையையும் ஏற்க இருக்கிறேன் எனக்கூறியது . ஆனால் அதை நம்ப முடியாத விஸ்வவசு இது வித்யாபதியின் சூழ்ச்சி என நினைத்து சிலகாலம் வித்யாபதியை சிறை வைத்தார்.

தனது மகளின் வேண்டுதலினால் சிலநாட்களுக்குப்பிறகு வித்யாபதியை விஸ்வவசு விடுவிக்க , அவனும் தனது தேசத்தை அடைந்து அரசனிடம் நீலமாதவன் இருப்பதைக்கூற அரசனும் கடுகு செடிகளின் மூலம் காட்டுக்குள் வழி கண்டுபிடித்து நீலமாதவரின் கோவிலுக்கு செல்ல அங்கே நீலமாதவரைக் காணவில்லை .

நீலமாதவரை காண முடியாததால் விஸ்வவசுவை சந்தேகித்து சிறை பிடித்தான் . அப்போது ஒரு அசிரிரியானது “அரசே விஸ்வவசு நிரபராதி அவனை விடுதலை செய் இந்த மலையின் உச்சியல் ஒரு கோவில் கட்டு அங்கு நான் தாருபிரம்மன் (மர) வடிவம் கொண்டு அருளாசி புரிவேன். இனி என்னை நீலமாதவராக தரிசிக்க இயலாது என்றது”.

அரசனும் ஜெகன்நாதருக்கு கோவிலைக் கட்டினார். கோவிலின் உச்சியில் கலசமும் அதன் மேல் சுதர்சன சக்கரமும் அமைக்கப்பெற்றது. கோவிலை தங்க ஆபரணங்களால் அலங்கரித்தார். அரசருக்கு, பிரம்மாவே நேரில் வந்து கோவிலில் மஹா கும்பாபிஷேகம் செய்து பக்தர்களை தரிசிக்க வைக்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே பிரம்மாவை நேரில் சென்று அழைக்க பிரம்மலோகம் சென்று தரிசனத்திற்காகப் பல வருடங்கள் காத்திருந்தார்.

இந்திரத்யும்னன் பிரம்மலோத்தில் இருந்தபோது சுரதேவாவும் பின்னர் கலமாதவரும் அப்பகுதியை ஆண்டனர். அப்போது கடலருகே அமைந்த திருக்கோவில் மணலால் மூடப்பட்டது. கலமாதவர் மணலில் புதையுண்ட அக்கோவிலை மீண்டும் புதப்பித்தார், இது நடந்த சிறிது காலத்தில் இத்திரத்யும்னன் பிரம்மலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்தார்.

கோயிலைப் புதுப்பித்த கலமாதவரும். இந்திரத்யும்னரும் தான் தான் கோயிலை நிர்மாணித்ததாக உரிமை கொண்டாடலானார்கள். அப்போது அக்கோயிலின் அருகே உள்ள ஆலமரத்தில் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஸ்ரீராமநாம ஜபம் ஜபித்துக் கொண்டிருந்த “பூசாந்தி” என்ற காகமானது நடந்ததைக் கூறியது.

ஸ்ரீ சேஷத்ரம் பகவானின் அந்தரங்க சக்தியால் எழுந்தருளியுள்ளது . மற்றும் பகவானே இங்கு எழுந்தருளியிருக்கிறார் . எனவே எனது வரையறைக்குள் அவரை ஸ்தாபிக்க முடியாததும், தேவையற்றதும் ஆகும். ஆகவே , இக்கோயிலின் உச்சியில் கொடியினை அமைக்கிறேன். இதை தூரத்தில் இருந்து காண்போரும் வணங்குவோரும் முக்தி அடைவர் என்றார் பிரம்மா, பின் சில காலம் கழித்து நீலமாதவரைக் காணாததால் விரக்தியடைந்த இந்திரத்யும்னன் உயிர்விட தீர்மானித்தார்.

அப்போது ஸ்ரீ ஜெகந்நாதர் கனவில் தோன்றி “திங்கி முஹ” கடற்கரையில் ஒதுங்கும் மரத்திம்மையில் ( தாரு பிரம்மன்) நான் பரிபூரணமாய் இருக்கிறேன் என்றார். அரசனும் வீரர்களுடன் அங்கு சென்று பார்த்தபோது ஒரு பெரிய மரத்துண்டானது சங்கு , சக்கரம் , கதை , தாமரை பொறிக்கப் பெற்றிருக்கக் கண்டு அதை கரைக்கு கொண்டுவர கட்டளையிட்டார். ஆனால் யானைகள் , குதிரைகள் , மனிதர்கள் , பலரை ஈடுபடுத்தியும் தாரு பிரம்மனைக் கரையேற்ற முடியவில்லை. மிகவும் சோர்ந்து போன அரசனிடம் பகவான் கனவில் மறுபடியும் தோன்றினார்.

நீலமாதவரை பூஜித்த விஸ்வவசுவையும், வித்யாபதியையும் இருபுறமும் நிற்கவைத்து தங்கத்தேரினை நடுவில் நிற்கவைத்தால் தாருபிரம்மமாகிய மரத்திம்மையை கரையேற்றுவது சுலபம் என்றார்.

puri

அரசன் அவ்வாறே செய்ய தாரு பிரம்மனை கோயிலினுள் கொண்டு வந்து சேர்த்தார்கள் . பிறகு பிரம்மா ஸ்ரீ நரசிம்மரை அங்கே பிரதிஷ்டை செய்தார். இன்று நாம் பூரியில் காணும் கோயில் அங்கு யாகம் நடத்திய ஸ்தலத்தில் அமைந்திருக்கிறது. முக்தி மண்டபத்தில் இருக்கும் நரசிம்மரின் மூர்த்தி பிரம்மாவால் யாகம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

தாருபிரம்மனில் இருந்த ஸ்ரீ ஜெகந்நாதரின் உருவத்தை செதுக்கி உருவாக்க அரசன் சிற்பிகளை நியமித்தார். ஆனால் சிற்பிகளால் எதுவும் செதுக்க முடியாமல் உளிகள் உடைந்து கொண்டே இருந்தன. மறுபடியும் அரசரின் பிரார்த்தனையால் கடவுளே “அனந்தமஹனா” என்ற வயதான சிற்பியின் உருவில் அந்த பணியினை முடிக்க வந்தார் ஒரு நிபந்தனையோடு.

நிபந்தனை இதுதான், மூன்று தேர்களை மற்ற சிற்பிகள் செய்ய வேண்டும். பகவானின் சிலைகளை மட்டும் வயதான சிற்பி கோவிலுக்குள் இருந்தபடி 21 நாட்களுக்குள் செய்து முடிப்பார்.

இதனிடையில் யாரும் கோவிலை திறக்க கூடாது. அரசனும் அவ்வாறே செய்ய சம்மதித்தார். 14 நாட்கள் சென்ற பின் உள்ளே சிற்பியின் செதுக்கும் ஓசை கூட கேட்காததால் அரசனுக்கு அளவில்லாத ஆர்வம் உண்டாகியது. அரசியும் உள்ளே சென்று பார்க்கச்சொல்ல அரசன் கொடுத்த வாக்கை மீறி கோயிலின் கதவை திறந்துவிட்டார்.

உள்ளே மூன்று சிலைகளும் முழுவதுமாக வடிவமைக்கப்படாமலும் கை , கால்கள் முற்றுப்பெறாத நிலையில் இருத்தன. சிற்பியை காணவில்லை. அமைச்சர் கூறினார் ‘ சிற்பியாக வந்தது ஜெகந்நாதரே! வாக்கை மீறியதால் பகவான் சிலை முற்றுப்பெறவில்லை ” என்று தெளிவு படுத்தினார்.

அரசரும் தனது தவற்றை எண்ணி வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டினார், பின்பு தர்ப்பப் புல்களைப் பரப்பி அதில் அமர்ந்து உயிரைவிடத் தீர்மானித்தார். அப்போது பகவான் அரசரின் கனவில் தோன்றி தான் தாரு பிரம்மனாக நீலாச்சல் என்ற இவ்விடத்தில் நித்தியமாகவும் அர்ச்சாவதாரமாகவும் இருக்கிறேன் என்றார்.

எனக்கு புறஉலக கைகளோ , கால்களோ தேவையில்லை. அவைகள் இல்லாமலே தன்னால் எல்லாவற்றையும் உணர, அனுபவிக்க பக்தர்களை அனுகிரஹிக்க முடியும் , வேதங்களில் குறிப்பிட்டிருக்கும் இந்த உறுதிமொழியைக் காக்க ஸ்ரீ ஜெகந்நாதர் இந்த ரூபத்தை எடுக்கிறார் . ” நீ உன்வாக்குறுதியை மீறிவிட்டதால் இந்த ஷேத்திரத்தில் என்னுடைய உருவம் இப்படியே இருக்கட்டும் இதுவும் எனது வீலைகளில் ஒன்றாகும் என்றார்.

பக்தர்களுக்கு நான் குழலூதும் கண்ணனாக காட்சி அளிப்பேன் . நீ விரும்பினால் எனது கை கால்களை வெள்ளி தங்க ஆபரணங்களினால் அலங்கரிக்கலாம் . எனது கை கால்கள் ஆபரணங்களுக்கு அழகூட்டும் ஆபரணங்களாகும் என்று கூறினார்.

ஸ்ரீ ஜெகந்நாதர் 56 வகையான உணவு வகைகளை தினமும் 8 முறை ஏற்றுகொள்கிறார். தனது ஒப்புயர்வற்ற இரதத்தில் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார். பின் அத்திருக்கோவில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமே மூடியிருக்க வேண்டும் மற்ற நேரங்களில் உலகத்தவர் அனைவரின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்படவேண்டும் என வேண்டினார்.

இப்படியாக ஸ்ரீஜெகந்நாதர் அவதரித்து தன்னை தேடி கோவிலுக்கு வராத, வரமுடியாத பக்தர்களுக்கு மோட்சத்தையும், ஞானத்தையும் கொடுப்பதற்காக தேரில் பவனி வருகிறார். இப்படி பவனி வரும் கருணை வாய்ந்த கேசவமூர்த்தியை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்று நாரத புராணத்தில் உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version